படைப்புச் சுதந்திரம் விலக்கப்பட்ட கனியா?
படைப்புச் சுதந்திரம் விலக்கப்பட்ட கனியா?
எழுத்தாளர் லட்சுமிஹரின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு, ‘கூத்தொன்று கூடிற்று’. இதில் பன்னிரண்டு சிறுகதைகள் உள்ளன. லட்சுமிஹர் தனக்கென்று தனித்துவமான கதைசொல்லும் பாணியை அமைத்துக்கொண்டவர். ஒவ்வொரு சிறுகதையும் குறைந்தபட்சம் இரண்டு வாசிப்புகளைக் கோருகின்றன. ஆனாலும் இரு வாசிப்பிலும் வெவ்வேறு அர்த்தங்களைப் புனைவு உருவாக்குகிறது.
‘மெழுகு’ என்ற சிறுகதை அப்படிப்பட்டது. மெழுகுக்கு ஒரு குறியீட்டுப் பொருள் உண்டு. அந்தப் பொருளை இந்தக் கதையுடன் அர்த்தப்படுத்தி இக்கதையின் முக்கியக் கதாபாத்திரத்தைப் புரிந்துகொள்ள முடியும். அவள் இறப்பிற்குப் பின்னுள்ள காரணங்களைப் பிரதி மறைத்தே வைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் வேறு வேறு காரணங்களைப் பிரதி உற்பத்தியும் செய்கிறது. சாத்தான், தேவதை என்ற இரு சொற்களின் வழியாகவும் இக்கதை பயணப்படுகிறது.