
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் இறுதிப் படைப்பு ‘கரமாஸவ் சகோதரர்கள்’. 170க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்தப் புத்தகம் உலகின் மகத்தான நாவல்களுள் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
மனித மனத்தின் இருண்மைகளுக்குள் எவ்விதத் தடையுமின்றிப் பயணிக்கும் ஆற்றல்பெற்ற தஸ்தயெவ்ஸ்கி, வாழ்வின் மீதான மனிதனின் பற்றினையும், அதன் பொருட்டு அவன் மேற்கொள்ளும் பல்வேறு செயல்களையும் ஒரு தத்துவ நிலையில் நின்று அலசி ஆராய்கிறார்.
சிற்றின்ப நாட்டம் கொண்ட கிழவர் பாவ்லோவிச், குருஷென்கா மற்றும் கத்ரீனா என்ற இரு பெண்களுக்கிடையில் சிக்கித் தவிக்கும் டிமிட்ரி, கத்ரீனாவை அடைய முனையும் இவான், துறவைத் துறந்து லிஸாவை மணக்க முடிவுசெய்யும் அலெக்ஸி, மனிதர்களின் வாதைகளைத் தீர்த்து வைக்கும் துறவி ஜோஸிமா என்று புத்தகமெங்கும் நிறைந்திருக்கும் சிறப்பான பாத்திர வார்ப்புகள், நம்மைக் கதை நிகழும் உலகுக்கே அழைத்துச் செல்கின்றன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்த நாவலை 150 பக்கங்களுக்குள் சுருக்கி, சுவை குன்றாமல் தந்திருக்கின்றார் ஆசிரியர் அனந்தசாய்ராம் ரங்கராஜன்.